திருமண வாழ்க்கை நீடிப்பது வெறுமனே அன்பின் அடிப்படையில் அல்ல. அன்பு ஆரம்ப நிலைக் காரணியாக இருக்கலாம். பெரும்பாலும் அது ஆரம்ப நிலைக் காரணியாக மட்டுமே இருக்கும். அன்பு ஒரே நிலையில் அப்படியே நீடிக்கக்கூடியது அல்ல. அது தற்காலிகமானது; மாறக்கூடியது; இடம்பெயரக்கூடியது. வெறுமனே அன்பின் அடிப்படையில் மட்டுமே மணவாழ்க்கை நிலைபெற வேண்டுமென்றால் அது சீர்குலைவாகவே எஞ்சி நிற்கும்.
திருமண வாழ்க்கை நீடிப்பதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. சில புரிந்துகொள்ளக்கூடியவை. சில புரிந்துகொள்ள முடியாதவை. புரிந்துகொள்ள முடியாதவை என்று நான் கூறுவது எந்த ஒரு ஒத்திசைவும் ஒன்றி, நிர்ப்பந்தமும் இன்றி தம்பதியினர் இணைந்திருப்பது. பரஸ்பர ஒப்பந்தம், ஒருவர் மற்றவரைச் சார்ந்திருத்தல், ஒருவர் மற்றவர் மீது இரக்கம்கொள்ளுதல், நிர்ப்பந்தம் இப்படி சில காரணங்களை சொல்ல முடியும். மணவாழ்க்கையை உறுதியான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் வர்ணிக்கிறது. அது எளிதில் முறித்து விடக்கூடிய ஒப்பந்தம் அல்ல.
ஆணும் பெண்ணும் சமமானவர்கள் அல்ல. அதே சமயம் ஆண் உயர்ந்தவனோ பெண் தாழ்ந்தவளோ பெண் உயர்ந்தவளோ ஆண் தாழ்ந்தவனோ அல்ல. அவர்கள் ஒருவர் மற்றவரை முழுமைப்படுத்தக்கூடியவர்கள். ஒருவர் மற்றவரைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள். இருவருக்கும் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளுக்கேற்ப வெவ்வெறு வகையான திறமைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஏதேனும் தேவையின்றி, நோக்கமின்றி கட்டுப்பட மாட்டான். தேவையை ஒருவர் மற்றவரைச் சார்ந்திருக்கச் செய்கிறது. மனிதர்கள் சுயநலம்கொண்டவர்கள். அவர்களின் சொல் வேறு, செயல் வேறு. மிகக் குறைவான மனிதர்களை சொல்லையும் செயலையும் ஒன்றுசேர்க்கிறார்கள். இரண்டுக்கும் மத்தியில் ஒத்திசைவுகளை ஏற்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் பிற மனிதர்களிடம் தாக்கங்களை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் கண்ணியப்படுத்தப்படுகிறார்கள்.

MASHA ALLAH