وَقَالُوا لَنْ يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى تِلْكَ أَمَانِيُّهُمْ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ بَلَى مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ عِنْدَ رَبِّهِ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ وَقَالَتِ الْيَهُودُ لَيْسَتِ النَّصَارَى عَلَى شَيْءٍ وَقَالَتِ النَّصَارَى لَيْسَتِ الْيَهُودُ عَلَى شَيْءٍ وَهُمْ يَتْلُونَ الْكِتَابَ كَذَلِكَ قَالَ الَّذِينَ لَا يَعْلَمُونَ مِثْلَ قَوْلِهِمْ فَاللهُ يَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُولَئِكَ مَا كَانَ لَهُمْ أَنْ يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللهِ إِنَّ اللهَ وَاسِعٌ عَلِيمٌ وَقَالُوا اتَّخَذَ اللهُ وَلَدًا سُبْحَانَهُ بَلْ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلٌّ لَهُ قَانِتُونَ بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ
2:111-117. “யூதர்கள் அல்லது கிருஸ்தவர்களைத்தவிர வேறு யாரும் சுவனத்தில் நுழைய மாட்டார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது அவர்களின் நிறைவேறாத ஆசைகளேயாகும். நீர் கேளும்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களின் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்.” அப்படியல்ல. யார் தம்மை முழுமையாக அல்லாஹ்விடம் ஒப்படைத்து தூய எண்ணத்துடன் நற்செயல் புரிபவராகவும் இருக்கின்றாரோ அவரது கூலி அவரது இறைவனிடத்தில் உள்ளது. அத்தகையோருக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். “கிருஸ்தவர்கள் எந்த அடிப்படையிலும் இல்லை” என்று யூதர்கள் கூறுகிறார்கள். “யூதர்கள் எந்த அடிப்படையிலும் இல்லை” என்று கிருஸ்தவர்கள் கூறுகிறார்கள். ஆயினும் அவர்கள் அனைவரும் வேதத்தை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் கூறுவதைப் போன்றே வேதம் குறித்து எதுவும் அறியாதவர்களும் கூறுகிறார்கள். அவர்கள் முரண்பட்டுக் கொண்டிருக்கும் விசயங்களில் அல்லாஹ்வே மறுமையில் தீர்ப்பளிப்பான். அல்லாஹ்வின் இல்லங்களில் அவனது பெயர் நினைவுகூரப்படுவதைத் தடுத்துக்கொண்டும் அவற்றைப் பாழாக்க முயன்றுகொண்டும் இருப்பவனைவிட பெரும் அநியாயக்காரன் யார்? பயந்தவர்களாகவே அன்றி அவற்றில் நுழைவதற்கு அவர்களுக்குத் தகுதியில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும் மறுமையில் கடும் வேதனையும் உண்டு. கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.” “அல்லாஹ் தனக்கு ஒரு மகனை ஏற்படுத்திக் கொண்டான்” என்று அவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு ஏற்படுத்திக்கொள்வதைவிட்டும் அவன் தூய்மையானவன். மாறாக வானங்கள், பூமியிலுள்ள அனைத்தும் அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன. அவன் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவன் ஏதேனும் ஒரு விசயத்தை நாடினால் ‘ஆகு’ என்றுதான் கூறுகிறான். அது ஆகிவிடும்.”
யூதர்களும் கிருஸ்தவர்களும் முஸ்லிம்களின் மீது கொண்டிருக்கும் பொறாமையே அவர்களை ஒரே குரலில் பேச வைக்கிறது. அவர்கள் ஒருவர் மற்றவரை நிராகரிப்பவர்கள். யூதர்கள் கிருஸ்தவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கிருஸ்தவர்கள் யூதர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இரு தரப்பினரின் உள்ளங்களும் ஒன்றுசேர முடியாத அளவு பிரிந்து கிடக்கின்றன. ஆனாலும் முஸ்லிம்களின் மீது அவர்கள் கொண்டிருக்கும் வெறுப்பு அவர்களை ஒரணியில் ஒன்றுதிரட்டுகிறது. அவர்கள் இருவரையும் ஒன்றுசேர்க்கும் புள்ளி இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் கொண்டிருக்கும் வெறுப்புதான். வெறுப்பின் அடிப்படையில் மனிதர்கள் ஒன்றிணைவார்கள் என்பதை தற்காலத்தில் நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இஸ்லாம் என்று வரும்போது தீய சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரே குரலில் பேச ஆரம்பிக்கின்றன.
ஏற்கனவே யூதமும் கிருஸ்தவமும் இருக்கும்போது மூன்றாவதாக இஸ்லாம் எதற்கு? நீங்கள் வெற்றி பெற வேண்டும் எனில், சுவனம் செல்ல வேண்டும் எனில் இந்த இரண்டு வழிமுறைகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றுங்கள் என்று அவர்கள் கூறினார்கள். இது எந்த ஆதாரமும் அற்ற, நிறைவேறாத, வீணான ஆசை. இது போன்ற ஆசைகளைக் கொண்டே அவர்கள் தங்களையும் மற்றவர்களையும் ஏமாற்ற எண்ணுகிறார்கள். வழிகேடர்கள் தங்களின் வழிகேட்டுக்கு ஆதரவாக இது போன்ற ஆதாரமற்ற விசயங்களைப் புனைந்து கொள்வார்கள்.
அல்லாஹ் அவர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்குமாறு தூதருக்கும் அவர் வழியாக நமக்கும் கட்டளையிடுகிறான். சரி, உங்களின் இந்த வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கான ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள் என்பதுதான் அது. உங்களின் வேதத்திலிருந்தே இதற்கான ஆதாரத்தை முன்வையுங்கள். எந்த அடிப்படையில் நீங்கள் இப்படி கூறுகிறீர்கள்?
அவர்களால் எப்படி, எங்கிருந்து ஆதாரத்தைக் கொண்டு வர முடியும்?
பிறகு அல்லாஹ் வெற்றி பெறுவதற்கான, சுவனம் செல்வதற்கான பொதுவான விதியைத் தெளிவுபடுத்துகிறான். அது முந்தையவர்கள், பிந்தையவர்கள் என அனைவருக்கும் பொருந்தக்கூடிய விதி. அது அல்லாஹ்வுடைய நீதியுடன் ஒத்திசைந்து செல்லும் விதி. அவன் யார் மீதும் அநீதி இழைக்க மாட்டான். சுவனத்தை குறிப்பிட்ட ஒரு சமூகத்தாருக்கு மட்டும் உரியதாக அவன் ஆக்க மாட்டான். யார் அந்த விதியைப் பின்பற்றுவார்களோ அவர்களே சுவனம் செல்வார்கள். அவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரியே.
யாரிடம் இஸ்லாமும் இஹ்ஸானும் இருக்கின்றனவோ அவர்கள்தாம் வெற்றி பெறுவார்கள். இஸ்லாம் என்றால் ஒருவர் தம்மை முழுமையாக அல்லாஹ்விடம் ஒப்படைப்பது, அவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவது. இஹ்ஸான் என்றால் அவனுடைய கட்டளைகளைச் சிறந்த முறையில் செயல்படுத்துவது. இப்படிக் கூறலாம்: யார் தங்களை முழுமையாக அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறார்களோ, அவனுடைய கட்டளைகளை சிறந்த முறையில் செயல்படுத்துகிறார்களோ அவர்கள்தாம் சுவனத்திற்கு உரியவர்கள். அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
சுவனம் செல்ல வேண்டும் எனில் ஒன்று யூதராக இருங்கள் அல்லது கிருஸ்தவராக இருங்கள் என்று ஒரே குரலில் பேசும் அவர்கள் உண்மையில் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு மத்தியில் அவர்கள் ஒன்றுசேர்ந்து இருப்பதற்கான பல அம்சங்கள் இருந்தாலும் அவற்றின் அடிப்படையில் அவர்கள் ஒன்றிணைவதில்லை. மாறாக அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பின் அடிப்படையில்தான் ஒன்றிணைந்திருக்கிறார்கள். அவர்கள் ஒருவர் மற்றவரை கடுமையாக நிராகரிப்பவர்கள் ஆவர். கிருஸ்தவர்கள் முழுக்க முழுக்க தவறான வழியில்தான் இருக்கிறார்கள் என்று யூதர்கள் கூறுகிறார்கள். யூதர்கள் முழுக்க முழுக்க தவறான வழியில்தான் இருக்கிறார்கள் என்று கிருஸ்தவர்கள் கூறுகிறார்கள். இந்த இரு தரப்பினரும் தங்களுக்கு வழங்கப்பட்ட வேதத்தை வாசித்துக் கொண்டே இப்படி கூறுகிறார்கள். யூதர்களும் கிருஸ்தவர்களும் முழுக்க முழுக்க தவறான வழிகளில்தான் இருக்கிறார்கள் என்று வேதம் குறித்து எதுவும் அறியாத இணைவைப்பாளர்களும் கூறுகிறார்கள். இவர்கள் தங்களுக்கு மத்தியில் கடுமையான முரண்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இப்படி முரண்பட்டுக் கொண்டிருக்கும் காரணத்தினால் அல்லாஹ் மறுமை நாளில் தண்டனையைக் கொண்டு தீர்ப்பளிப்பான்.
தாங்கள் ஓரணியில் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் இந்த யூதர்களும் கிருஸ்தவர்களும் தங்களுக்கு மத்தியில் எந்த அளவு மோசமாக மோதிக் கொண்டார்கள் என்பதற்கான ஓர் உதாரணம்தான் அவர்கள் ஒருவர் மற்றவரின் ஆலயங்களுக்கு எதிராக வரம்பு மீறி நடந்து கொண்டது. இது தொடர்பாக அவர்களின் வரலாற்றில் பல்வேறு சம்பவங்கள் காணப்படுகின்றன. யூதர்கள் கிருஸ்தவர்களின் ஆலயங்களைத் தகர்த்தார்கள். கிருஸ்தவர்கள் ஆட்சியைப் பெற்ற பிறகு மஸ்ஜிதுல் அக்ஸாவைத் தகர்த்தார்கள். இரு சாராரும் மாறி மாறி அல்லாஹ்வின் ஆலயங்களுக்கு எதிராக பலமுறை வரம்பு மீறியிருக்கிறார்கள். கிருஸ்தவர்கள் கஅபாவை நோக்கி மக்கள் ஹஜ் செல்வதை தடுக்க முயன்றார்கள். அவர்களின் முயற்சி தோல்வியடையவோ அப்ரஹா என்ற ஆட்சியாளன் கஅபாவைத் தகர்ப்பதற்காக படையோடு புறப்பட்டு வந்தான். இறுதியில் அல்லாஹ் அவனையும் அவனுடைய படையினரையும் கூட்டம் கூட்டமாக பறவைகளை அனுப்பி அடியோடு அழித்தான். இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களை கஅபாவுக்குச் செல்ல விடாமல் தடுத்தார்கள். அல்லாஹ்வின் இல்லங்களில் அவனுடைய பெயர் நினைவுகூரப்படுவதைத் தடுப்பதும் அவற்றைப் பாழாக்க முயற்சிப்பதும் மிகப் பெரிய குற்றமாகும். ஓரணியில் இருக்கும் இந்த மூன்று தரப்பினரும் இந்தக் குற்றத்தைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் இல்லங்களில் பயந்தவர்களாக, அவனைக் கண்ணியப்படுத்தியவர்களாகத்தான் நுழைந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களோ அவற்றைப் பாழாக்குபவர்களாக, அவற்றின் கண்ணியத்தைக் குலைத்து குழப்பம் விளைவிப்பவர்களாக நுழைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இவ்வுலகில் இழிவுதான் கிடைக்கும். மறுமையில் அவர்களுக்கு கடுமையான வேதனை காத்திருக்கிறது.
தங்கள் சிந்தனைப்பள்ளியை, இயக்கத்தைச் சாராத மற்ற பள்ளிவாசல்களை அழிக்க நினைக்கும், அவற்றில் நிகழும் வழிபாடுகளைத் தடுக்க நினைக்கும், அவற்றின் கண்ணியத்தைச் சீர்குலைக்க முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கு இந்த வசனத்தில் கடும் எச்சரிக்கை இருக்கிறது. யூதர்களும் கிருஸ்தவர்களும் கூறிக் கொண்டிருந்ததுபோன்றே இவர்களும் தங்களின் எதிர்த்தரப்பினரைப் பார்த்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். சிறுசிறு கருத்து வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி தாங்கள் மட்டுமே சத்தியத்தில் இருப்பதாகவும் மற்றவர்கள் அனைவரும் முழுக்க முழுக்க வழிகேட்டில்தான் இருக்கிறார்கள் என்று கூறிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த வசனத்தில் கடும் எச்சரிக்கை இருக்கிறது.
“கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் இருக்கிறது”
யூதர்களும் கிருஸ்தவர்களும் தங்களுக்குள் அடித்துக் கொண்டு ஒருவர் மற்றவரின் ஆலயங்களைத் தாக்கி அழித்ததற்கான காரணங்களில் ஒன்று, அவர்கள் தங்களின் வழிபாட்டில் வெவ்வேறு திசைகளை முன்னோக்கிக் கொண்டிருந்தார்கள் என்பதாகும். இருவரும் பைத்துல் முகத்தஸை முன்னோக்கித்தான் தொழுதார்கள் என்றாலும் கிருஸ்தவர்கள் பைத்துல் முகத்தஸின் கிழக்குத் திசையையும் யூதர்கள் அதன் மேற்குத் திசையையும் முன்னோக்கினார்கள். இது பைத்துல் முகத்தஸின் ஆலயத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர்களுக்கு மத்தியில் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தியது.
இந்த வசனம் அவர்கள் ஏன் ஒருவர் மற்றவரின் ஆலயங்களைத் தாக்கி அழித்தார்கள் என்பதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்துவதோடு முஸ்லிம்களுக்கு இது தொடர்பான அடிப்படையான கண்ணோட்டத்தையும் தெளிவுபடுத்துகிறது. கிழக்குத் திசையோ மேற்குத் திசையோ எதுவானாலும் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. இங்குள்ள அனைத்தும் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளன. திசையை முன்னோக்குவது அல்ல இங்கு முக்கியம். அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்துவதுதான் இங்கு முக்கியம். வெறுமனே இந்த காரணத்திற்காக சண்டையிட்டது யூத, கிருஸ்தவர்களின் முட்டாள்தனம் அன்றி வேறில்லை. அவர்கள் பைத்துல் முகத்தஸை முன்னோக்கி – அதன் கிழக்குத் திசையையோ மேற்குத் திசையையோ – எந்த திசையை முன்னோக்கி தொழுதிருந்தாலும் அது அல்லாஹ்வை முன்னோக்கித் தொழுவதுதான். ஒவ்வொரு திசையும் அவனுக்கே உரியது. குறிப்பிட்ட திசையோடு அவனை சுருக்கிவிட முடியாது. அவன் விசாலமானவன். எங்கு நோக்கினும் அவனைப் பெற்றுக்கொள்ள முடியும். அடியார்களின் செயல்களைக் குறித்து நன்கறிந்தவன்.
அடுத்த வசனம் இறைவனைக் குறித்து யூதர்களும் கிருஸ்தவர்களும் இணைவைப்பாளர்களும் கொண்டிருந்த பிழையான ஒரு கண்ணோட்டத்தைத் தெளிவுபடுத்துகிறது. ஒருவரையொருவர் மறுத்துக் கொண்டிருந்த மூன்று தரப்பினரும் இந்த விசயத்தில் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.
“அல்லாஹ் தனக்கு ஒரு மகனை ஏற்படுத்திக் கொண்டான்” என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘வலத்’ என்ற வார்த்தை ஒருமை, பன்மை, ஆண்பால், பெண்பால் ஆகிய அனைத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி. தமிழில் இந்த வார்த்தையை ‘பிள்ளைகள்’ என்று மொழிபெயர்க்கலாம் என்று கருதுகிறேன்.
உஸைர் இறைவனின் மகன் என்று யூதர்கள் கூறினார்கள். ஈசா இறைவனின் மகன் என்று கிருஸ்தவர்கள் கூறினார்கள். இறைவனுக்குப் பெண்மக்கள் இருக்கிறார்கள். அவர்கள்தாம் வானவர்கள் என்று இணைவைப்பாளர்கள் கூறினார்கள். பல்வேறு சமூகங்களில் இறைவனைக் குறித்த இது போன்ற பிழையான நம்பிக்கைகள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. நம்மைச் சுற்றி வாழக்கூடிய பல்வேறு சமூகங்களில் இது போன்ற நம்பிக்கைகள் பல்வேறு வடிவங்களில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. மனிதனுக்கு இருக்கும் பலவீனங்கள் இறைவனுக்கும் இருக்கின்றன என்ற பிழையான கண்ணோட்டத்திலிருந்தே இது போன்ற பிழையான நம்பிக்கைகள் உருவாகின்றன. இதுபோன்ற குறையுடைய பண்புகளிலிருந்து, பலவீனங்களிலிருந்து அல்லாஹ் தூய்மையானவன். அவனுக்குத் எந்த தேவையும் இல்லை. அனைவரும் அவன் பக்கமே தேவையுடையவர்களாக இருக்கிறார்கள். வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்கே சொந்தம். ஒவ்வொன்றும் அவனுக்கே கட்டுப்பட்டவையாக இருக்கின்றன. அவன் வானங்களையும் பூமியையும் எந்த முன்மாதிரியும் மூலப்பொருளும் இன்றி படைத்தவன். அவனுடைய ஆற்றல் எந்த வரம்புக்கும் உட்பட்டதல்ல. அவன் ஏதேனும் ஒன்றை படைக்க நாடினால் ஆகு என்றுதான் கூறுகிறான். அது ஆகிவிடும். இப்படிப்பட்ட பேராற்றல் கொண்ட அல்லாஹ்வை எப்படி நீங்கள் பலவீனங்கள் கொண்டவனாக ஆக்குகிறீர்கள்? மனிதர்களுக்கு மனைவி, மக்கள் தேவை. அவர்களுக்கு குடும்பம் தேவை. அவர்களுக்கு சக மனிதர்கள் தேவை. அவர்கள் பிள்ளைகளைப் பெறுகிறார்கள். அவர்களின்மூலம் தங்களின் சந்ததி நீடிப்பதாக நம்புகிறார்கள். இந்த வகையான எதுவும் அவனுக்குத் தேவையில்லை. அவன் பேராற்றல் கொண்டவன்.
