وَقَالَ الَّذِينَ لَا يَعْلَمُونَ لَوْلَا يُكَلِّمُنَا اللهُ أَوْ تَأْتِينَا آيَةٌ كَذَلِكَ قَالَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ مِثْلَ قَوْلِهِمْ تَشَابَهَتْ قُلُوبُهُمْ قَدْ بَيَّنَّا الْآيَاتِ لِقَوْمٍ يُوقِنُونَ إِنَّا أَرْسَلْنَاكَ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَلَا تُسْأَلُ عَنْ أَصْحَابِ الْجَحِيمِ وَلَنْ تَرْضَى عَنْكَ الْيَهُودُ وَلَا النَّصَارَى حَتَّى تَتَّبِعَ مِلَّتَهُمْ قُلْ إِنَّ هُدَى اللهِ هُوَ الْهُدَى وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَتْلُونَهُ حَقَّ تِلَاوَتِهِ أُولَئِكَ يُؤْمِنُونَ بِهِ وَمَنْ يَكْفُرْ بِهِ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ يَابَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَلَا هُمْ يُنْصَرُونَ
2:118-123. “அல்லாஹ் ஏன் எங்களுடன் பேசக்கூடாது? அல்லது ஏதேனும் ஒரு சான்று ஏன் எங்களிடம் வரக்கூடாது?” என்று அறியாதவர்கள் கேட்கிறார்கள். இவ்வாறே அவர்களுக்கு முன்னிருந்தவர்களும் கூறினார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒன்றையொன்று ஒத்திருக்கின்றன. உறுதியாக நம்பிக்கைகொண்டோருக்கு நாம் சான்றுகளைத் தெளிவுபடுத்திவிட்டோம். “தூதரே! நாம் உம்மை சத்தியத்தைக் கொண்டு நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியுள்ளோம். நரகவாசிகளைக் குறித்து உம்மிடம் கேட்கப்பட மாட்டாது. யூதர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும்வரை உம்மைக் குறித்து ஒருபோதும் திருப்தியடைய மாட்டார்கள். நீர் கூறும்: “அல்லாஹ் காட்டிய வழியே நேரான வழியாகும்.” இந்த ஞானம் வந்த பின்னரும் அவர்களின் மன விருப்பங்களை நீர் பின்பற்றுவீராயின் அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு உதவ எந்த பாதுகாவலரும் உதவியாளரும் இருக்க மாட்டார். யாருக்கு நாம் வேதத்தை வழங்கியுள்ளோமோ அவர்கள் அதனை படிக்க வேண்டிய முறைப்படி படிக்கிறார்கள். அவர்கள்தாம் அதன்மீது நம்பிக்கை கொள்கிறார்கள். யார் அதனை நிராகரிக்கிறார்களோ அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.” இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு வழங்கிய என் அருட்கொடையையும் உலகத்தார் அனைவரிலும் உங்களைச் சிறப்பாக்கி வைத்திருந்ததையும் நினைவுகூருங்கள். ஒரு நாளை அஞ்சிக் கொள்ளுங்கள். அந்நாளில் ஒருவர் மற்றவருக்கு எவ்விதப் பயனையும் அளிக்க மாட்டார். யாரிடமிருந்தும் ஈடான எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எந்தப் பரிந்துரையும் அவருக்குப் பயனளிக்காது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.”
இணைவைப்பாளர்களும் யூதர்களும் இணையும் மற்றுமொரு புள்ளியை இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது. இருவரும் அந்த விசயத்தில் ஒரே மனநிலையையே கொண்டிருக்கிறார்கள். சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனதிலிருந்து வெளிப்படும் போலியான தர்க்கம் அது.
ஏன் அல்லாஹ் முஹம்மதிடம் மட்டுமே பேசுகிறான்? ஏன் அவன் எங்களுடன் பேசுவதில்லை? அல்லது ஏதேனும் ஒரு சான்று எங்களிடம் வர வேண்டாமா? என்று அன்றைய இணைவைப்பாளர்கள் ஆட்சேபனைகளை முன்வைத்தார்கள். இங்கு அறியாதவர்கள் என்ற வார்த்தை வேதம் குறித்து எதுவும் அறியாத அவர்களையே குறிக்கிறது. இப்படித்தான் இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இவர்களின் உள்ளங்களும் அவர்களின் உள்ளங்களும் ஒன்றையொன்று ஒத்திருக்கின்றன என்ற வாசகத்தோடு அவர்களுக்கான பதிலும் முடிந்து விடுகிறது. சரியாகக் கூற வேண்டுமானால் அவர்களின் இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படவில்லை. அவர்களின் மனநிலை முந்தையவர்களின் மனநிலையை ஒத்திருக்கிறது என்பது மட்டுமே சுட்டிக் காட்டப்படுகிறது. அவர்களின் இந்த ஆட்சேபனைகள் பதிலளிக்கப்பட தகுதியானவை அல்ல. இவ்வாறு பதிலளிக்கப்படாமல் விட்டு விடுவதுதான் அவர்களுக்கான பதில்.
முந்தையவர்கள் என்றால் இதை மனநிலையோடு தங்களின் தூதர்களை எதிர்கொண்ட முந்தைய சமூகத்தினர். அவர்களில் யூதர்களும் உள்ளடங்குவர். அவர்கள் மூசாவிடம், “அல்லாஹ்வை நாங்கள் கண்கூடாகக் காணும்வரை நீர் கூறுவதை நாங்கள் நம்ப மாட்டோம்” என்று கூறினார்கள். சத்தியத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாத பிடிவாதக்கார சமூகத்தினர்தாம் இதுபோன்ற விதண்டாவாதங்களை முன்வைப்பார்கள்.
அவர்கள் ஏன் ஏதேனும் ஒரு சான்றினை வேண்டுகிறார்கள்? அவர்களுக்கு எந்த சான்றும் வழங்கப்படவில்லையா? சத்தியத்தை உறுதியாக அறிந்து கொள்ள விரும்புவோருக்கு அல்லாஹ் போதுமான சான்றுகளைத் தெளிவுபடுத்தி விட்டான். அவர்கள் அவற்றைக் கொண்டு எந்த சந்தேகமும் அண்டாத உறுதியான நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்தக் குர்ஆனே அவர்களுக்கான மிகப் பெரிய சான்றுதான். ஆனால் அவர்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ளும் சான்றுகளை விரும்பவில்லை. பார்த்தவுடன் தங்களை திகைக்க வைக்கும் சான்றுகளை எதிர்பார்த்தார்கள். ஒரு வேளை அப்படியான சான்றுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் திருக்குர்ஆன் கூறுவதுபோல “இவை தெளிவான சூனியமே, எங்களின் கண்கள் மயக்கப்பட்டிருக்கின்றன” என்று கூறி நிராகரித்து விடுவார்கள்.
இந்த தூதரும் அவர்களுக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய சான்றுதான். அல்லாஹ் அவரை சத்தியத்தைக் கொண்டு – உண்மையான இந்த மார்க்கத்தைக் கொண்டு – நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்தான். அவர் இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இதன் அடிப்படையில் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களுக்கு அல்லாஹ்வின் திருப்தியைக் கொண்டு, சுவனத்தைக் கொண்டு, இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றியைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றார். இந்த மார்க்கத்தை நிராகரிப்பவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனையைக் கொண்டு, நரகத்தைக் கொண்டு எச்சரிக்கை செய்கின்றார். நற்செய்தி கூறுவதோடு, எச்சரிக்கை செய்வதோடு அவரது பொறுப்பு நிறைவடைந்து விடுகிறது. நற்செய்தியையும் எச்சரிக்கையையும் மீறி தங்களின் வழிகேட்டில் நிலைத்திருப்பவர்களுக்கு அவர் பொறுப்பாளியாக மாட்டார்கள். அவர்கள் ஏன் வழிகேட்டில் சென்றார்கள் என்பது குறித்து அவர் விசாரிக்கப்பட மாட்டார். இந்த வசனம் நபியவர்களுக்கும் அவர்கள் விட்டுச் சென்ற பணியைச் செய்யக்கூடிய அழைப்பாளர்களுக்கு பெரும் ஆறுதலையும் தெளிவையும் வழங்குகிறது. அழைப்பின் பாதையில் தொய்வடையாமல் தொடர்ந்து நீடிப்பதற்கு இந்த தெளிவு மிகவும் அவசியம்.
அல்லாஹ்வை நோக்கி, அவனுடைய மார்க்கத்தை நோக்கி அழைப்பு விடுக்கும் அழைப்பாளர்களின் பொறுப்பு எடுத்துரைப்பதோடு நிறைவடைந்து விடுகிறது. இஸ்லாத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. எல்லா அதிகாரத்தையும் தன் வசம் வைத்திருக்கும் அல்லாஹ் மனிதர்களுக்கு தெரிவு செய்யும் சுதந்திரத்தை வழங்கியுள்ளான். விரும்பினால் அவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். விரும்பினால் அவர்கள் நிராகரிக்கலாம். ஆனால் அவர்கள் நிராகரித்தால் அவர்களுக்கு ஏற்படும் இழப்புக்கும் பெரும் துன்பத்திற்கும் அவர்களே பொறுப்பு.
யூதர்களின், கிருஸ்தவர்களின் நிராகரிப்பும் அதிருப்தியும் நபியவர்களை கவலையுறச் செய்தன. இவ்வளவு தெளிவான சான்றுகளை முன்வைத்த பிறகும் இதுதான் உண்மை என்பதை அவர்கள் அறிந்துகொண்ட பின்னரும் அவர்கள் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்! யூதர்கள் தங்களின் வழிகேட்டில் நிலைத்திருக்கிறார்கள். அவர்களின் மார்க்கத்தை நீங்கள் பின்பற்றும்வரை உங்களின் விசயத்தில் ஒருபோதும் திருப்தியடைய மாட்டார்கள். கிருஸ்தவர்கள் தங்களின் வழிகேட்டில் நிலைத்திருக்கிறார்கள். அவர்களின் மார்க்கத்தை நீங்கள் பின்பற்றும்வரை உங்களின் விசயத்தில் ஒருபோதும் அவர்கள் திருப்தியடைய மாட்டார்கள். இருவருக்கும் மத்தியில் ஏராளமான முரண்பாடுகள் இருந்தாலும் இஸ்லாத்தை, அதன் தூதரை எதிர்க்கும் விசயத்தில் அவர்கள் இருவரும் ஒன்றுபட்டுள்ளார்கள். இரண்டும் வேறுபட்டிருந்தாலும் வழிகேடு என்ற வகையில் இரண்டும் ஒன்றுதான்.
நீர் கூறும்: “அல்லாஹ் காட்டிய வழியே நேரான வழியாகும்”
உங்களிடம் இருப்பது உங்களின் விருப்பங்களுக்கேற்ப நீங்கள் உருவாக்கிக் கொண்ட மார்க்கம்தான். உங்களின் இடைச் செருகல்களால் அல்லாஹ்வின் மார்க்கத்தை நீங்கள் சிதைத்து விட்டீர்கள். உங்களிடம் இருக்கும் தவறான மார்க்கத்தைக் கொண்டு நீங்கள் அல்லாஹ்வை அடைய முடியாது. அல்லாஹ் காட்டிய வழிதான் நேரான வழி. அல்லாஹ் இந்த தூதருக்கு இஸ்லாம் என்னும் நேரான வழியை வழங்கியுள்ளான். அது ஒன்றே அவனை அடைவதற்குரிய நேரான வழி. அதைத் தவிர மற்றவை அனைத்தும் உங்கள் மன விருப்பங்களின் வெளிப்பாடுகள்தாம்.
இந்த தூதருக்கும், அவர் வழியாக நம்பிக்கையாளர்களுக்கும் அல்லாஹ் தெளிவாக அறிவிப்பது, இஸ்லாம் என்னும் இந்த ஞானம் வந்த பிறகு எதிரிகளைத் திருப்திபடுத்தும்பொருட்டு அவர்களின் விருப்பங்களை நீங்கள் பின்பற்றினால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் எந்தப் பாதுகாவலரும் உதவியாளரும் இருக்க மாட்டார்கள்.
அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றும்வரைதான் அவனுடைய பாதுகாப்பும் உதவியும் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும். அவர்கள் நிராகரிப்பாளர்களைத் திருப்திபடுத்தும்பொருட்டு தங்களின் மார்க்கத்தை விட்டுவிட்டு நிராகரிப்பாளர்களின் வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கினால் அவனுடைய பாதுகாப்பையும் உதவியையும் இழந்து விடுவார்கள். இது எல்லா காலகட்டத்திற்கும், இடத்திற்கும் பொருந்தக்கூடிய நிரந்தரமான எச்சரிக்கை.
அல்லாஹ்வின் மார்க்கம் என்பது அவன் தன் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வழியாக மனித சமூகத்திற்கு வழங்கிய இஸ்லாம் மட்டுமேயாகும். அதைத் தவிர மற்றவை அனைத்தும் மனிதர்களின் மன இச்சைகளாகும்.
யூதர்களும் கிருஸ்தவர்களும் தங்களின் மன விருப்பங்களையே பின்பற்றுகிறார்கள். அவர்களிடம் இருப்பது தூய அல்லாஹ்வின் வழிகாட்டல் அல்ல என்பது தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அடுத்து வரும் வசனம் அவர்களில் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அவர்கள் வேதத்தைப் படிக்க வேண்டிய முறைப்படி படிக்கிறார்கள். அவர்கள் தங்களின் விருப்பங்களுக்கேற்ப வேதத்தின் கருத்துகளை திரிப்பதும் இல்லை. மனிதர்களின் இடைச் செருகல்களை நம்புவதும் இல்லை. அதன் வசனங்களில் ஆழ்ந்து கவனம் செலுத்தி இஸ்லாம் குறித்த, நபியவர்கள் குறித்த அதன் முன்னறிவிப்புகளை அறிந்து கொள்கிறார்கள். சத்தியத்தை கண்டடைய வேண்டும் என்ற தங்களின் ஆவலினாலும் தேடலினாலும் அவர்கள் இஸ்லாத்தை கண்டடைகிறார்கள். அவர்கள் இந்த மார்க்கத்தை, அதன் தூதரை, அதன் வேதத்தை நம்புகிறார்கள். யார் இந்த மார்க்கத்தை சத்தியம் என அறிந்த பிறகும் நிராகரிக்கிறார்களோ அவர்கள்தாம் பெரும் இழப்புக்கு உரியவர்கள். அல்லாஹ் மனித சமூகத்திற்கு வழங்கிய மாபெரும் இந்த கொடையை இழந்து விடுபவர்களைவிட பேரிழப்புக்கு உரியவர்கள் வேறு யார் இருக்க முடியும்?
இந்த அத்தியாயத்தின் ஆரம்பப் பகுதியில் ‘இஸ்ராயீலின் மக்களே’ என்று அழைக்கப்பட்ட யூதர்கள் மீண்டும் இந்த இடத்தில் அழைக்கப்படுகிறார்கள். அதே வசனம் மீண்டும் இந்த இடத்தில் வருகின்றது. தங்கள் இறைவனுடனும் தங்கள் தூதர்களுடனும் அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது விரிவாக எடுத்துரைக்கப்பட்ட பிறகு விடுக்கப்படும் இந்த அழைப்பும் செய்யப்படும் இந்த எச்சரிக்கையும் அவர்களுக்கு விடுக்கப்படும் இறுதியான அழைப்புபோன்றும் அவர்களுக்குச் செய்யப்படும் இறுதியான எச்சரிக்கை போன்றும் இருக்கின்றது. யஅகூபின் பிள்ளைகளே! நான் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளையும் அந்தச் சமயத்தில் இருந்த மனிதர்களில் அனைவரையும்விட உங்களை சிறப்பாக்கி வைத்திருந்தையும் நினைத்துப் பாருங்கள். உங்கள் வேதத்தை படிக்க வேண்டிய முறைப்படி படித்து நீங்கள் சத்தியத்தை கண்டு கொள்ளுங்கள். உங்கள் மீதான அருட்கொடை தொடர்ந்து நீடிக்கு இந்த மார்க்கத்தையும் இந்த தூதரையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். அவ்வாறு ஏற்றுக் கொள்வதன்மூலமே நீங்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றி பெற முடியும். உங்களின் கடந்த கால தவறுகளிலிருந்து நீங்கள் படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள். மறுமை நாளை அஞ்சிக் கொள்ளுங்கள். அந்த நாளில் யாரும் யாருக்கும் பயனளிக்க முடியாது. யாரிடமிருந்து எந்த ஈட்டுத்தொகையும் பெறப்பட மாட்டாது. எந்தப் பரிந்துரையும் யாருக்கும் பயனளிக்காது. அவர்களுக்கு எந்த வகையிலும் உதவி கிடைக்காது.
