திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சிதறல்களாக இருக்கின்றனவே? இது அதன் குறைபாடுகளில் ஒன்றல்லவா?
திருக்குர்ஆனை மேலோட்டமாகப் படித்துப் பார்க்கும்போது அதன் வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சிதறல்களாகத் தெரியும். அதனை முறையாகவும் ஆழ்ந்தும் படிப்பவர்கள் அதன் வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சிதறல்கள் அல்ல என்பதையும் அவை நுணுக்கமான இழைகளால் பின்னப்பட்டுள்ளவை என்பதையும் வசனங்களுக்கு இடையேயான நுணுக்கமான தொடர்புகள் அதன் மகத்தான அற்புதங்களில் ஒன்று என்பதையும் அத்தகைய தொடர்புகள் ஒருபோதும் மனிதர்களால் ஏற்படுத்த முடியாதவை என்பதையும் எளிதாக உணர்ந்துகொள்ள முடியும்.
பல்வேறு அறிஞர்கள் இந்த உண்மையை கூறியிருந்தாலும் சில அறிஞர்களே தங்களின் விரிவுரை நூல்களின் வழியாக இதனை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். பேரறிஞர் ரஷீத் ரிளா, அவரது ஆசிரியர் முஹம்மது அப்துஹு, இமாம் ஹமீதுத்தீன் ஃபராஹீ, அவரது மாணவர் அமீன் அஹ்ஸன் இஸ்ஹாஹீ, செய்யத் குதுப் ஆகியோர் இந்த துறையில் பெயர் குறிப்பிடத்தகுந்த பேரறிஞர்கள் ஆவர். இது நுட்பமான அறிவையும் ஆழ்ந்த கவனத்தையும் வேண்டி நிற்கும் ஒரு துறை. திருக்குர்ஆன் முன்வைக்கும் ததப்புர் என்னும் திருக்குர்ஆன் வசனங்களில் ஆழ்ந்து கவனம் செலுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள் இந்த உண்மையை எளிதாக உணர்ந்துகொள்ள முடியும்.
