“அந்த கணத்தை என்னால் அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை. வெறுமையும் அழுத்தமும் சலிப்பும் கடந்த உணர்வு அது. அந்த கணத்தில் செத்து விடலாமா என்று கூடத் தோன்றுகிறது. நான் என்ன செய்வது?“
ஏதோ ஒரு வகையில் மன அழுத்தமோ மனச் சிக்கலோ கொண்டவர்களுக்கு அவ்வப்போது ஏற்படக்கூடிய நிலைதான் இது. இந்த நிலையை எவ்வித இழப்பும் இன்றி எப்படிக் கடப்பது என்பதைக் குறித்துதான் நீங்கள் சிந்திக்க வேண்டும். இது போன்ற சந்தர்ப்பங்களில் உங்களின் கவனத்தை திசைதிருப்ப நீங்கள் வலிந்து முயற்சிக்க வேண்டும். உங்களின் கவனம் சிதறி மனம் ஏதோ ஒன்றில் லயித்து விட்டால் நீங்கள் எளிதாகக் கடந்துவிட முடியும். அந்த ஏதோ ஒன்று உங்களை மிகைத்து விடக்கூடாது. அதற்கு நீங்கள் அடிமையாகி விடவும் கூடாது. அவ்வாறு ஆகிவிட்டால் நீங்கள் இன்னும் ஒரு புதிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்.
அந்தச் சமயத்தில் ஒளு செய்து விட்டு பள்ளிவாசலிலோ அமைதியான ஓரிடத்திலோ தொழ முயற்சியுங்கள். உங்களால் தொழ முடிந்தால் அல்லாஹ்விடத்தில் அந்த உணர்வை நீக்குமாறு பிரார்த்தனை செய்ய முடிந்தால் இதைவிட சிறந்த தீர்வு வேறு எதுவும் இல்லை. எண்ணங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. நாம் பலவீனமாக இருக்கும் சமயத்தில் ஷைத்தான் இது போன்ற எண்ணங்களை நம் உள்ளத்தில் ஏற்படுத்தலாம். அவற்றின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். அவனிடம் பாதுகாப்பு கோருபவர்கள் நிச்சயம் பாதுகாப்புப் பெறுவார்கள்.
இஸ்திக்ஃபார் என்னும் பாவமன்னிப்புக் கோரிக்கையை தொடர்ந்து கடைப்பிடியுங்கள். ஆச்சரியமான முறையில் அல்லாஹ்வின் உதவி உங்களை வந்தடையும். நாம் பலவீனமானவர்களே. அந்த எண்ணங்கள் நம்மை இன்னும் பலவீனப்படுத்தி விடுகின்றன. நாம் பெரும் பலம் கொண்ட, எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்ளும்போது பலமானவர்களாக மாறுகிறோம்.
