உங்களிடம் நன்றி செலுத்தும் பண்பு இருக்கிறது எனில் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்களிடம் இருப்பவை பாதுகாக்கப்படும். எதிர்பாரா புறத்திலிருந்து நீங்கள் உதவி செய்யப்படுவீர்கள். நான் கூறுவது படைத்த இறைவன் உங்களுக்கு அளித்த அருட்கொடையை உணர்ந்து நன்றி செலுத்தும் பண்பு. அதுதான் முதன்மையானது. மற்றவை அதற்குப் பின்னால் வரக்கூடியவை. அதுதான் எல்லாவற்றுக்கும் மதிப்பளிப்பவை. அதுவன்றி மற்றவை எவ்வித மதிப்பும் அற்றவை.
“நீங்கள் நன்றி செலுத்தினால் உஙகளுக்கு நான் அதிகமதிகம் தருவேன். நீங்கள் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொண்டால் நிச்சயமாக என்னுடைய தண்டனை மிகக் கடுமையானது” இது குர் ஆனில் அல்லாஹ் அளிக்கும் வாக்குறுதியும் அவன் விடுக்கும் எச்சரிக்கையும் ஆகும். இது இங்கு செயல்படும் நிலையான விதி.
நன்றி செலுத்துதல் என்னும் பண்பு வடிவங்களில் வெளிப்படுகிறது. அவற்றில் முதன்மையானது அல்லாஹ் வழங்கிய செல்வத்தை, ஞானத்தை, ஆரோக்கியத்தை, ஆற்றலை அவன் சொன்ன பாதையில் பயன்படுத்துவதும் அவனுடைய மார்க்கத்திற்காக பயன்படுத்துவதும் அவற்றை அவன் விரும்பாத வழிகளில், தவறான வழிகளில் பயன்படுத்தாமல் இருப்பதும் ஆகும்.
நன்றிகெட்டத்தனம் மிகப்பெரிய குற்றம். படைப்பாளன் இலகுபடுத்தியிருப்பதை மறந்து என் முயற்சி, என் திறமை, என் ஆற்றல், என் உழைப்பினால் உருவான சாம்ராஜ்ஜியம் இது என்றெல்லாம் கூறுவது மிகப்பெரிய நன்றிகெட்டத்தனம். அது அழிவையும் இழிவையும் கொண்டு வந்து சேர்க்கும்.
