குடும்ப வாழ்வு சுமூகமாகச் செல்வதற்குப் பின்னால் நேரடியான அல்லது மறைமுகமான சர்வாதிகாரமும் நிர்ப்பந்தமும் இருக்கின்றன. இரு சமமான மனிதர்கள் நீண்ட நாட்கள் ஒன்றுசேர்ந்து இருக்க முடியாது. இருவரிடமும் காணப்படும் கூர்மையான ஈகோ அவர்களைப் பிரித்து விடும். ஆனாலும் அவர்கள் ஓர் இடைவெளியோடு சேர்ந்திருக்க முடியும். ஒருவர் ஆதிக்கம் செலுத்துபவராக இருந்தால் மற்றொருவர் அடங்கிப் போக வேண்டும். இருவரும் ஒருசேர ஆதிக்கம் செலுத்த முயன்றால் குடும்பம் உடைந்து விடும். பெரும்பாலும் இரு வேறுபட்ட மனிதர்களே ஒன்றிணைகிறார்கள். ஒரே உலகைச் சேர்ந்த இரு மனிதர்களால் வாழ்க்கைத் துணைவர்களாக நீடிக்க முடியாது. அப்படியே நீடித்தாலும் ஒருவர் ஆதிக்கம் செலுத்துபவராகவும் இன்னொருவர் பணிந்து செல்பவராகவும்தான் இருப்பார்கள்.
ஒருவர் மற்றவரைச் சார்ந்து வாழும் வாழ்க்கைதான் நீடிக்கிறது. ஏதேனும் ஒரு வகையில் கணவன் மனைவியை, மனைவி கணவனை சார்ந்திருக்கவில்லையெனில் அவர்களின் வாழ்க்கை அர்த்தமற்ற வாழ்க்கையாக ஆகிவிடும். மனிதர்களை ஒன்றிணைப்பது தேவைகள்தாம். அவை நிரந்தரமானவை. உணர்வுகள் தற்காலிகமானவை. அவை ஆரம்பகட்ட ஒன்றிணைவுக்கு உதவலாம். ஆனால் தேவைகள்தாம் அந்த ஒன்றிணைவை நீடிக்கச் செய்கின்றன.
சமம் என்பது பல தளங்களில் சாத்தியமில்லை. அது ஒரு வகையான மாயை. இந்த உலகம் தலைவர்களால் நிரம்பினால் சீர்குலைந்து விடும். இங்கு தலைவர்களும் தொண்டர்களும் முதலாளிகளும் தொழிலாளிகளும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு மத்தியில் உணர்வுரீதியான ஒரு சமத்துவத்தை ஏற்படுத்த முடியும். புறக் காரணங்களின் அடிப்படையில் யாரும் யாரையும்விட சிறந்தவர்களாக ஆகிவிட முடியாது என்பதுதான் அது. இஸ்லாம் அப்படித்தான் கூறுகிறது. உங்களில் மிகச் சிறந்தவர் தக்வா உடையவர்தான் என்று இஸ்லாம் கூறுகிறது. தக்வா என்பது இறைவனின் கட்டளைகளை, அறிவுரைகளைப் பின்பற்றுவது. இந்த அடிப்படையில் மனிதர்களுக்கு மத்தியில் காணப்படும் வெளிப்படையான பாகுபாட்டினால் ஏற்படும் தீய விளைவுகளை நம்மால் தடுக்க முடியும். அவர்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்த முடியும்.

May ALLAH forgive us (Aameen).